THE PARABLE OF NATHAN | நாத்தானின் உவமை - 2 SAMUEL Ch. 11,12

THE PARABLE OF NATHAN

PARABLE OF NATHAN

அன்புடையீர், வணக்கங்கள்



நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
உவமைகள் பொதுவாக புதிய ஏற்பாட்டில் தான் இருக்கும். ஆனால், பழைய ஏற்பாட்டிலும் கதைகள், விடுகதைகள், உவமைகள் உண்டு. இந்த பாடத்தில் நாத்தான் - அரசர் தாவீதிடம் குட்டி ஸ்டோரியை போல சொன்ன உவமையின் விளக்கங்களை பார்க்க போகிறோம்.
நாம் அறிந்திருக்கிற படி, ஒவ்வொரு உவமைக்குள்ளும் கடவுளின் அரசாட்சி குறித்த ரகசியம் ஒன்று மறைந்திருக்கும். மேற்கொண்டு படிக்கும் முன், 2 சாமுயேல் 11 மற்றும் 12 அதிகாரங்களை வாசித்து சம்பவங்களை நினைவில் கொள்ளவும். நன்றி. 🙂


இந்த பாடத்தில், சம்பவங்களை நாம் இரண்டு கண்ணோட்டத்தில் பார்க்க போகிறோம்.

1. கதையின் உருவக விளக்கம்.
2. மறைந்துள்ள தீர்க்கதரிசனம்.

உவமையின் பின்னணி:

நாம் அறிந்த படி, அரசர் தாவீது அவர்கள், ஒரு மாபெரும் தவறு ஒன்று செய்து விட்டார்.
ஏன் அரசர் தாவீது தவறு செய்தார்?
வாசிப்போம்...
2 சாமுயேல் 11:1
மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரயேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
இந்த வசனத்தின் மூலமாக, ராஜாக்கள் யுத்தத்திற்கு செல்லும் காலம் ஒன்று இருந்திருக்கிறது என்று அறிகிறோம். ஆனால், அரசர் தாவீது தனது சோம்பேறித்தனத்தினால் எருசலேமில் தங்கி விட்டார். ஒரு வேளை, யுத்தத்திற்கு சென்றிருந்தால், அவர் இச்சையில் விழாமல் இருந்திருக்கலாம்.
பின், ஏத்தியனாகிய உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை கண்டு, யோவாப் மூலமாக அழைப்பித்து உடலுறவு கொண்டார். (2 சாமுயேல் 11:2-4)
இந்த சமயம், அவளது கணவன் உரியா போரில் இருந்தார். இப்போது ஒரு கேள்வி எழுகின்றது.
ஏத்தியர்கள் இஸ்ரேலுக்கு எதிரிகள். (உபாகமம் 7:1)
அவர்களோடு திருமணம் செய்ய கூடாது என்ற கடவுளின் கட்டளை (உபாகமம் 7:1)இருக்க
எப்படி ஏத்தியனாகிய உரியா, யூத பெண்ணை திருமணம் செய்தார்?
யார் இந்த ஏத்தியர்கள்?
ஆதியாகமம் 10:1,6,15
நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து காம்மின் புதல்வர்; கூசு, எகிப்து, பூற்று, கானான்.
கானானின் தலைமகன் சீதோன், ஏத்து (HITTITES)
ஆம். ஏத்தியர்கள் - நோவா தாத்தாவால் சபிக்கப்பட்ட கானானின் (ஆதியாகமம் 9:25) சந்ததியர்.
எப்படி ஏத்தியனோடு திருமணம்?
யாத்திராகமம் 12:48,49
48 அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம். 49 சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
கடவுளின் இந்த கட்டளைப்படி, அந்நியரும் இஸ்ரயேலர்களில் ஒருவராய் கருதப்பட்டனர்.
இந்த ஏத்தியனாகிய உரியா - தாவீதின் 37 பராக்கிரம சாலிகளில் ஒருவர் (2 சாமுயேல் 23:39)
உரியாவும் அரசர் தாவீதும்
பத்சேபாள் தன் மூலமாக கர்ப்பம் தரித்ததை அறிந்த அரசர் தாவீது, இகழ்ச்சியில் இருந்து தப்பிக்க - ஒரு திட்டத்தோடு, போரில் இருந்த அவளது கணவன் உரியாவை அரண்மனைக்கு அழைத்து, போர் பணியில் இருந்து அவரை விடுவித்து, உச்சிதமான பதார்த்தங்களோடு வீட்டுக்கு அவரது மனைவியோடு இருக்க அனுப்பினார் (2 சாமுயேல் 11:6-8).
அதனால், குழந்தை பிறந்தவுடன் அது உரியாவின் குழந்தையாக எண்ணப்பட்டு, இகழ்ச்சியில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் கொண்டார்.
ஆனால், உரியாவோ வீரர்கள் போருக்கு சென்றிருக்க, தான் வீட்டுக்கு செல்வதில்லை என்று அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார்.
URIAH SLEEPS OUTSIDE THE PALACE

இது குறித்து, அரசர் தாவீதின் கேள்விக்கு, அவர் கூறிய பதிலை கண்டிப்பாக வாசிப்போம்...
2 சாமுயேல் 11:11
11 அதற்கு உரியா தாவீதிடம் "பேழையும் இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர்.
என் தலைவர் யோவாபும் என் தலைவரின் பணியாளரும் திறந்த வெளியில் தங்கியிருக்கின்றனர்.
நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்தும் என் மனைவியோடு உறவுகொண்டும் இருப்பேனா?
உம் மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவேமாட்டேன"; என்று சொன்னார்.
இவ்வார்த்தைகள் மூலம், உரியா கடவுளின் பெட்டி மீதும், இஸ்ரயேல் நாட்டின் மீதும், மக்கள் மீதும் கொண்டிருந்த மிகுந்த அன்பை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், எப்படியாவது உரியாவை வீட்டுக்கு அனுப்ப திட்டம் தீட்டிய அரசர் தாவீது, அடுத்த நாள் அவரை மது குடித்து வெறிக்க பண்ணினார். ஆனாலும், அந்த நிலையிலும் உரியா தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்து வீட்டுக்கு போகாமல், அரண்மனையிலேயே படுத்துக் கொண்டார்.
ஆக, என்ன பண்ணாலும், உரியா வீட்டுக்கு செல்லாததால், உரியாவை சாகடிக்க முடிவெடுத்த அரசர் தாவீது, மிகவும் விஷமமாக - அவரது மரண சாசனத்தை அவரது கையிலேயே கொடுத்து யோவாபிடம் கொடுக்க அனுப்பினார். அதில் என்ன எழுதி இருந்தது?

வாசிப்போம்...
2 சாமுயேல் 11:15
அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
இதை வாசிக்கும் போதே, நமக்கு இதயம் பதைக்கிறது.
அரசர் தாவீது, தனக்கும் நாட்டுக்கும் மிகவும் விசுவாசமாக இருந்த 37 பராக்கிரமசாலிகளில் (2 சாமுயேல் 23:39) ஒருவரை தந்திரமாக கொலை செய்தார்.
பின், உரியாவின் மரண செய்தி, அரசர் தாவீதிடம் அறிவிக்கப்பட்டது. பத்சேபாள் அரண்மனைக்குள் வந்து அரசருக்கு மனைவியானாள்.
வாசிப்போம்...
2 சாமுயேல் 11:15
26 உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள்.
27 துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்கு கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.
நாத்தானின் கதை
இந்த சூழ்நிலையில், கடவுள் - நாத்தானை அரசர் தாவீதிடம் அனுப்புகிறார்.

வாசிப்போம்...
2 சாமுயேல் 12:1-4
1 ஆண்டவர் நாத்தானைச் தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்;
ஒரு நகரில் இரு மனிதர்கள் இருந்தனர். ஒருவன் செல்வன் மற்றவனோ ஏழை.

2 செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.

3 ஏழையிடம் ஒரு பெண் ஆட்டுக் குட்டியைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது.

4 வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக் குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்.
.
5 உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்..
.
6 இரக்கமின்றி இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்" என்று நாத்தானிடம் கூறினார்..
.
7 அப்போது நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன்.
கதையில் உள்ள மனிதர்கள்
THE STORY OF NATHAN

கதையில்,
  • ஒரே பட்டணத்தில் வாழும்
  • இரண்டு மனிதர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
  • ஒருவர் ஐஸ்வர்யம் உடையவர்
  • அவரிடம் அநேக ஆடுகளும், மாடுகளும் இருந்தன.
  • மற்றவர் ஏழை
  • ஏழையிடம் விலைக்கு வாங்கின ஒரே ஒரு பெண் ஆட்டுக்குட்டி இருந்தது.
    பெண் ஆட்டு குட்டி என்று மூல எபிரேய மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஆங்கிலத்தில் EWE LAMB = YOUNG FEMALE LAMB என்று இருக்கும்.
  • அந்த ஆட்டுக்குட்டி, அவரது பிள்ளைகளோடு ஒரு மகளை போல வளர்ந்து,
  • அவரது தட்டிலேயே சாப்பிட்டது.
  • அவரது கிண்ணத்தில் நீர் குடித்தது
  • ஒரு நாள்
  • பின் ஒரு வழி போக்கன் (விருந்தாளி) வந்த போது, அந்த ஐஸ்வர்யவான் - அந்த ஏழையின் ஒரே ஒரு ஆட்டை அடித்து கறி குழம்பு செய்து வழி போக்கணுக்கு தந்தான் என்று கதை முடிகிறது.

  • இந்த கதையை கேட்டவுடன் தாவீது கடும் கோபம் கொண்டார்.
    அநியாயம் செய்த அந்த ஐஸ்வர்யவானுக்கு நான்கு மடங்காக திருப்பி தர வேண்டும் என்று ஆணையிட்டார். இதற்கு பின் நடந்த சம்பவங்களை கண்டிப்பாக பைபிளில் வாசித்து அறிந்து கொள்ளவும்.
    கதையின் உருவக விளக்கம்
    நாத்தான் கூறிய கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்களின் உருவக விளக்கம், இங்கு பட்டியலிடப்படுள்ளது.


    இவ்வாறு வழி போக்கனாக, அரசர் தாவீதின் சோம்பேரிதனத்தால், அவரது இருதயத்தில் வந்த இச்சை, உரியா - பத்சேபாளிடம் இருந்த அழகான கணவன் - மனைவி உறவை கொன்று போட்டது. IT KILLED IT
    உரியாவுக்கு பிள்ளைகள் இருந்ததா? ஆனால், ஏழையிடம் இருந்த ஆட்டுக் குட்டி பிள்ளைகளோடு வளர்ந்ததே!!! அப்படி என்றால், யார் அந்த பிள்ளைகள்?
    அரசர் தாவீதின் இரண்டு தீர்ப்புகள்
    நாத்தான் கூறிய கதையை கேட்டவுடன், தாவீது இரண்டு தீர்ப்புகள் சொல்கிறார்.
    வாசிப்போம்...
    2 சாமுயேல் 12:5,6
    5 உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும். 6 இரக்கமின்றி இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்" என்று நாத்தானிடம் கூறினார்.
    இதை எதன் அடிப்படையில், அரசர் தாவீது கூறினார்?
    வாசிக்கலாம்...
    யாத்திராகமம் 22:1 ஆட்டையோ மாட்டையோ ஒருவர் திருடி வெட்டி விட்டால் அல்லது விற்றுவிட்டால் ஒரு மாட்டுக்கு ஐந்து மாடு என்றும், ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவர்.
    இந்த நியாயபிரமானத்தின் படி, தண்டனை தீர்ப்பு கூறிய அரசர் தாவீதுக்கு, அதன்படியே நடக்கிறது.
    1. பத்சேபாளுக்கு பிறந்த குழந்தை பெயரிடப்படாமலே மரித்தது.
    2 Samuel 12:15-18
    2. அம்னோன் (அப்சலோமால் கொல்லப்பட்டார்.)
    2 Samuel 13:28–29
    3. அதொனியா (சாலமோனால் கொல்லப்பட்டார்)
    1 Kings 2:24–25
    4. அப்சலோம் (யோவாபால் கொல்லப்பட்டார்)
    2 Samuel 18:14–15
    ஆகிய அவரது மகன்களில் நான்கு பேர், அவர் மரணிப்பதற்கு முன்பாகவே மரித்தனர்.
    இது நாத்தான் கூறிய கதையின் நேரடியான விளக்கம்.
    இப்போது, இந்த கதையில் மறைந்துள்ள தீர்க்கதரிசனத்தை அறிவோம்.
    மறைந்துள்ள தீர்க்கதரிசனம்
    ஐசுவர்யவான்

    நிழலில், அரசர் தாவீது தான் ஐசுவர்யவான்.
    அவர் ஆட்டு குட்டியை திருடினார். சாகடித்தார்.
    பொருளில்...?
    வாசிப்போம்.
    யோவான் 10:10
    திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
    இங்கு, நம் ஆண்டவர் - சாத்தானை தான் திருடன் என்று குறிப்பிடுகிறார்.
    ஐசுவர்யவான் = சாத்தான்
    அரசர் தாவீது - கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசராக இருந்தாலும், அவர் செய்த இந்த காரியம் - சாத்தானை பிரதிபலிக்கிறது. வாசிப்போம்...
    யோபு 41:34
    லிவியாத்தான் பாம்பு (சாத்தான்) மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.
    சாத்தான் = ஐஸ்வர்யவான் என்றால், அந்த பெண் ஆட்டுக் குட்டியை வைத்திருந்த ஏழை மனிதர் யாரை அடையாளப்படுத்துகிறார்?
    ஏழை | நகரம்
    வாசிப்போம்...
    2 கொரிந்தியர் 8:9
    நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.
    ஆம், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக ஏழையானார்.
    இந்த உலகம் அனைத்தையும் படைத்த நம் ஆண்டவர், அவர் பிறந்த போது கூட தங்குவதற்கு இடமில்லாமல் இருந்ததை நாம் அறிவோம்.
    ஏழை மனிதர் = நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
    கதையில், ஐஸ்வர்யவானும், ஏழையும் ஒரே நகரத்தில் இருந்தனர்.
    அப்படி என்றால்,
    அந்த நகரம் எது?

    சாத்தான், இந்த உலகத்தின் அதிபதியாக இருக்கிறான் என்று வாசிக்கிறோம்.
    யோவான் 12:31, 14:30, 16:11
    நம் ஆண்டவரும் இதே உலகத்திற்கு தான் வந்தார். ஆம்.
    நகரம் = உலகம்

    ஐஸ்வர்யவானின் ஆடு, மாடுகள்
    ஐஸ்வர்யவானிடம் பல ஆடுகளும், மாடுகளும் இருந்தது.
    வாசிப்போம்...
    யோவான் 4:5,6
    5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, 6 அவரிடம், "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.
    1 யோவான் 5:19
    நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும்.
    ஐஸ்வர்யவானிடம் இருந்த ஆடு, மாடுகள் = உலகத்தில் உள்ள பல்வேறு மக்களையும், ஜாதிகளையும் அடையாளப்படுத்துகிறது.
    ஏழையின் பெண் ஆடு
    ஏழை மனிதனிடம் - ஒன்றும் இல்லை. அந்த பெண் ஆட்டுக் குட்டியை தவிர
    வாசிப்போம்...
    பிலிப்பியர் 2:7
    6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.
    நம் ஆண்டவர் இவ்வுலகத்திற்கு வந்த போது, அவரிடம் பொருள் ஏதும் இல்லை.
    ஆனால், அவரிடம் இருந்த அந்த பெண் ஆட்டுக் குட்டி = மணவாட்டி திருச்சபை.
    திருவெளிப்பாடு 19:7
    எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.
    ஆம். 144000 அங்கங்கள் உள்ள திருச்சபையான நாம் தான், ஏழையான நம் ஆண்டவரின் செல்ல ஆட்டுக் குட்டி.
    அந்த ஏழை - ஆட்டுக் குட்டியை விலை கொடுத்து வாங்கினார்.
    நம் ஆண்டவர் - நம்மை தமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டு கொண்டார்.
    திருவெளிப்பாடு 5:9
    நீர் கொல்லப்பட்டீர்; உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.
    1 பேதுரு 1:18,19
    18 உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; 19 மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும்.
    எபேசியர் 5:27
    கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
    அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து
    EAT THE BREAD AND DRINK THE WINE

    வாசிப்போம்..
    2 சாமுயேல் 12:3
    அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
    எவ்வாறு அந்த ஏழையின் ஆட்டுக் குட்டி, அவரது வாயின் அப்பத்தை தின்று, அவரது பாத்திரத்தில் குடித்ததோ - அவ்வாறே, நம் ஆண்டவரும் நம்மை இறை வார்த்தைகளாலும், தாகமே எடுக்காத சத்தியத்தினாலும் திருச்சபையை அனுதினமும் போஷிக்கிறார். வாசிப்போம்...
    யோவான் 6:56
    என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
    எபேசியர் 5:29
    தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே,கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார்.
    அவன் பிள்ளைகளோடு கூட வளர்ந்து, மடியிலே படுத்து, மகளைப்போல இருந்தது

    அந்த ஆட்டுக் குட்டி - அந்த ஏழையின் பிள்ளைகளோடு வளர்ந்தது.
    அது போல,
    நாம் அனைவருமே, நம் ஆண்டவரின் பிள்ளைகள் தான்.
    நமக்குள்ளே தான், அவரது பெண் ஆட்டுக்குட்டியான திருச்சபையாக மாற போகும் கிறிஸ்துவின் மணவாட்டியும் இருக்கிறார்; திரள் கூட்டமும் இருக்கிறார்கள்.

    பிள்ளைகள் = திரள் கூட்டம்
    அந்த ஆட்டுக் குட்டி - அவரது மடியில் படுத்துக் கொண்டது. அது போல, நம் ஆண்டவரும் அவரது ஆட்டுக் குட்டிகளான திருச்சபையையும் தமது மடியில் சுமந்து நடத்துகிறார்.
    வாசிப்போம்...
    ஏசாயா 40:11
    மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
    புதிய ஏற்பாட்டில்,
    யோவான் 13:23
    அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் (யோவான் 🙂) இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
    நம் ஆண்டவர், அவரது திருச்சபையான நம்மையும் மிகவும் நெருக்கமாக வைத்திருக்கிறார்.
    ஒரு தாய், அவளது பிள்ளையை (மகளை) போல நம்மை நேசிக்கிறார், பாதுகாக்கிறார்.
    யோவான் 13:33
    சுத்திகரித்து கொண்டிருந்த பெண்

    2 சாமுயேல் 11:2
    ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள்.
    நிழல்: ஒரு நாள், அரசர் தாவீது, அந்த அழகிய தோற்றம் கொண்ட பெண்ணை பார்த்த பொழுது - அவள் (பத்சேபாள்) குளித்து (சுத்திகரித்து) கொண்டிருந்தார். பின் அவள் தன் கணவனோடு உள்ள திருமண உறவை கொன்றார்.
    பொருள்:அழகான திருச்சபை - கிறிஸ்துவோடு ஞானஸ்நானம் உடன்படிக்கை மூலம் சேர்வது பிடிக்காத சாத்தான் - அந்த கிறிஸ்து - மணவாட்டி உறவை கொல்ல வகை தேடுகிறான்.
    வழி போக்கன்: ஏழையிடம் இருந்த ஆடு - ஐஸ்வர்யவானால் திருடப்பட்டு, வழி போக்கனிடம் சாப்பிட தரப்பட்டது.
    பொருளில்,இயேசு கிறிஸ்து விடம் இருந்த திருச்சபை, சாத்தனால் திருடப்பட்டு, எந்த வழி போக்கனிடம் தரப்பட்டது?
    யார் அந்த ஒரே ஒரு வழி போக்கன்?

    வாசிப்போம்...
    2 தெசலோனிக்கேயர் 2:3
    எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகன் ஆகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
    கேட்டி மகன் = பாவ மனிதன் = எதிர் கிறிஸ்து = வழி போக்கன் = போப் ஆண்டவர்கள்
    திருச்சபையின் வளர்ச்சியை கெடுக்க நினைத்த சாத்தான் - அவர்களை போப் ஆண்டவன்-கள் கையில் 1260 வருடங்கள் சிக்க வைத்து கொன்றான். (அந்தி = எதிர் கிறிஸ்து பாடத்தை அறிந்தவர்கள், இதை புரிந்து கொள்ள முடியும்.)
    அந்த ஆட்டை அடித்தது சாத்தான். ஆனால், அதை சாப்பிட்டது வழி போக்கன். வாசிப்போம்...
    திருவெளிப்பாடு 17:5,6
    5 "பாபிலோன் மாநகர் விலைமகளிருக்கும் மண்ணுலகின் அருவருப்புகள் அனைத்துக்குமே தாய்" என்பதே அதன் பொருள். 6 அப்பெண் இறைமக்களின் இரத்தத்தையும் இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தையும் குடித்து வெறி கொண்டிருக்கக் கண்டேன்.
    சாத்தானுக்கு அளிக்கப்படும் தண்டனைகள்

    நாத்தான் கதையை கூறியவுடன், தாவீது கூறிய இரண்டு தீர்ப்புகள் என்ன?
    2 சாமுயேல் 12:6 இரக்கமின்றி இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்" என்று நாத்தானிடம் கூறினார்.
    அது போல், சாத்தானும் - திருச்சபையை கொன்ற குற்றத்திற்காக, நான்கு தண்டனைகளை பெற வேண்டும்.

    மேலுள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள படி, சாத்தானின் ஆளுகைக்கு உட்பட்ட அரசியல், மதம், பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை கடவுள் அழிப்பார்.
    இதற்குரிய தீர்க்கதரிசன வசனங்கள் சில கொடுக்கப்படுள்ளது.
    மற்றொரு தீர்ப்பு...
    2 சாமுயேல் 12:5 உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்.
    ஆம். கண்டிப்பாக, ஆட்டுக் குட்டியை கொன்றவன் சாக வேண்டும்.
    அது போல, திருச்சபையை கொன்ற சாத்தான் சாக வேண்டும்.
    வாசிப்போம்..
    எசேக்கியேல் 28:18
    18 உன் மிகுதியான பாவங்களாலும் நேர்மையற்ற வாணிபத்தாலும் உன் திருத்தலங்களைத் தீட்டுப்படுத்தினாய்; எனவே உன் நடுவினின்று நெருப்பு வரச்செய்தேன்(இரண்டாம் மரணம்). உன்னைப் பார்த்தோர் கண்முன்னே முற்றிலும் உன்னைத் தரையில் சாம்பலாக்கினேன்.
    19 உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு மருண்டு திகிலுறுகின்றன. நடுங்கற்குரிய முடிவுக்கு வந்து விட்டாய் நீ; இனிமேல் நீ இருக்கமாட்டாய்."
    ஆக, சாத்தானின் அழிவையும், கிறிஸ்து தமது திருச்சபையின் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பையும் - நாத்தான் மூலமாக இந்த கதையில் (உவமையில்) கடவுள் நமக்கு வெளிப்படுத்தி உள்ளார்.
    பொறுமையுடன் படித்த உங்களுக்கு நம் பரமதந்தையும் இறைமகனாரும் ஆசீர் அளிப்பார்களாக.
    ஆமென்.


    Comments