THE CLEVER AND NOTORIOUS ACCOUNTANT | தந்திரமும் கூர்மதியுமுள்ள கணக்காளர் - LUKE 16: 1-15

THE CLEVER AND NOTORIOUS ACCOUNTANT

THE CLEVER AND NOTORIOUS ACCOUNTANT

அன்புடையீர்,வணக்கங்கள்.🙂🙏

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாம் அறிந்த படி, உவமைகளில் பரலோக ராஜ்யத்தின் ரகசியங்கள் உள்ளது.
இந்த பாடத்தில், லூக்கா சுவிசேஷ புத்தகத்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும் உக்கிராணக்காரன் (கணக்காளர்) உவமையில் மறைந்துள்ள பொருளையும், பரலோக ராஜ்யத்தில் நடக்க போகும் தீர்க்கதரிசனத்தையும் அறிந்து கொள்வோம்.
நம் ஆண்டவர் இந்த உவமையை, சீடர்களிடம் உருவகமாக கூறினாலும் (லூக்கா 16:1), அங்கே இந்த பண ஆசைமிக்க பரிசேயரும் அதை கேட்டு - (புரிந்து கொண்டு) ஏளனம் செய்தார்கள் என்று வாசிக்கிறோம். (லூக்கா 16:14)
அப்படி என்றால், இந்த உவமை சீடர் = சிறுமந்தைக்கும் பொருந்தும்,
அன்று மக்களை அதிகாரத்துடன் வழி நடத்திய பண ஆசை உடைய பரிசேயருக்கும் பொருந்தும்,
இன்று மக்களை வழிநடத்துவது போல நாடகமாடும் பண ஆசையுடைய தசமபாக பாஸ்டர்களுக்கும் பொருந்தும் என்று அறிந்து கொள்கிறோம்.
இந்த வசன பகுதியை, நாம் இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

LUKE 16: 1- 8 உவமையின் கதை
LUKE 16: 9- 15 நம் ஆண்டவர் கூறிய உவமையின் தாத்பரியம்
ஒருமுறை, இந்த வசனபகுதியை முழுவதுமாக வாசித்து நினைவில் கொள்வோமா? 🙂
லூக்கா 16: 1 - 8 - 15
வாசிப்போம்:
உவமை
லூக்கா 16: 1 - 8
1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர்(எஜமான்) ஒருவருக்கு வீட்டுப் கணக்காளர் = உக்கிரானக்காரர் ஒருவர் இருந்தார். அவர் தம் எஜமானரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.
2 எஜமான் - கணக்காளரை கூப்பிட்டு, “உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் இருக்க முடியாது” என்று அவரிடம் கூறினார்.
3 அந்த வீட்டுப் கணக்காளர், “நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் எஜமான் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது: இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.
4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்” என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
5 பின்பு அவர் தம் ஏஜமானரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், “நீர் என் எஜமானிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?” என்று கேட்டார்.
6 அதற்கு அவர், “நூறு குடம் எண்ணெய்” என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், “இதோ உம் கடன் சீட்டு: உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்” என்றார்.
7 பின்பு அடுத்தவரிடம், “நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நூறு மூடை கோதுமை” என்றார். அவர், “இதோ, உம் கடன் சீட்டு: எண்பது என்று எழுதும்” என்றார்.
8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், எஜமான் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.
உவமையின் தாத்பரியம்
லூக்கா 16: 9 - 15
9 “ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.
10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?
12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?
13எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது: ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்: அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது.
14 பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.
15 அவர் அவர்களிடம் கூறியது: “நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.

உவமையில் கூறப்பட்டவை
இந்த உவமையில், நம் ஆண்டவர் - ஒரு ஊரில் உள்ள ஒரு எஜமானனையும் அவருடைய கொடுத்தல் - வாங்கல் கணக்குகளை கவனித்துக் கொள்ளும் உக்கிராணக்காரன் = கணக்காளர் பற்றி கூறுகிறார்.
கணக்காளரின் பண மோசடி குறித்து புகார்கள் எஜமானனுக்கு தெரிய வந்ததால், அதுவரை அவர் பொறுப்பில் உள்ள கணக்கு அறிக்கையை ஒப்படைத்துவிட்டு வேலையை விட்டு நின்று கொள் என்று கூறுகிறார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த கணக்காளர், தனக்குள் - இனி மண்வெட்டியும் எடுக்க முடியாது, பிறரிடம் இரந்து உண்ணவும் வெட்கப்பட்டு, பிறரிடம் நற்பெயர் வாங்குவதற்காகவும் வேலையை விட்டு நின்றபின், கடன் பட்டவர்களுடன் இணைந்து கொள்ள கூர்மதியுடன் ஒரு திட்டம் போடுகிறார்.
அதன்படி, தன்னுடைய எஜமானிடம் கடன் பட்டவர்களை வரவழைத்து,
100 குடம் எண்ணெய் வாங்கியவரிடம் 50 என்றும்,
(50% தள்ளுபடி)
100 கலன் கோதுமை வாங்கியவரிடம்
80 என்று அவர்களுடன் இணைந்து தவறாகவும் குறைவாகவும் கணக்கை மாற்றுகிறார்.
(20% தள்ளுபடி)
இதையும் கேள்வியுற்ற எஜமான், நேர்மையற்ற அந்த கணக்காளர் முன்மதியோடு செயல்பட்டதாக அவரை பாராட்டுகிறார்.
100 குடம் எண்ணெயும்,
100 கலன் கோதுமையும்

100 குடம் எண்ணெய்
1 குடம் = 1 Bath (Greek) = 22 Litres
100 குடம்= 2200 Litres of Oil
100 கலன் கோதுமை
1 கலன் = 1 Kor (Greek) = 180 Kg (Approximately)
100 கலன் = 18000 Kilograms = 18 TONS
இரண்டு எஜமான்களுக்கு வேலை செய்யும் பரிசேயர்
இந்த உவமையை, நம் ஆண்டவர் சீடர்களிடம் கூறினாலும், அதை பரிசேயரை குறித்து தான் குறிப்பாக பேசுகிறார் என்பதை வசனங்கள் 9-15 மூலம் அறிந்து கொள்கிறோம்.
தங்களை பற்றி தான் இந்த உவமை - என்பதை அருகில் இருந்து கேட்டு கொண்டிருந்த பரிசேயரும் மிக தெளிவாக புரிந்து கொண்டார்கள்.
14 பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.
15 அவர் அவர்களிடம் கூறியது; "நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.
இதை வாசிக்கும் போது, இந்த உவமையின் மையப் பொருள் பரிசேயரை பற்றி என்று அறிகிறோம்.
மேலும் நம் ஆண்டவர் இரண்டு எஜமான்களுக்கு வேலை செய்வதை பற்றி கூறியது, தங்களை பற்றி தான் என்பது பரிசேயருக்கு குத்தி இருக்க வேண்டும்.
லூக்கா 16:13
எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். கடவுளுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
இங்கு இரண்டு எஜமான் என்பது:
எஜமான் 1 = கடவுள்
எஜமான் 2 = சாத்தான்
பரிசேயர், கணக்காளர் = உக்கிராணக்காரன் வேலையை செய்தார்களா?
உக்கிராணக்காரன் என்றால் கணக்கு ஒப்புவுக்கும் வேலை.
ஆம். பரிசேயரிடம் நியாயப் பிரமாணத்தின் கணக்கு ஒப்புவிக்கும் வேலை அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
பவுல் அடிகளாரும், பரிசேயரை கடுமையாக சாடுகிறார்.
வாசிக்கவும்
ரோமர் 2: 17 - 24
சில வசனங்களை இங்கு வாசிப்போம்.
ரோமர் 2: 18,21
நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து. நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.
இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?
இவ்வசனங்களில் பவுல் அடிகளார், நியாயப்பிரமாணத்தை பிறருக்கு போதிக்கும் பரிசேயரே அதை மீறுவதை குறித்து மிகவும் கடுமையாக கேள்வி எழுப்புகிறார்.
ரோமர் 2:23
நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, கடவுளை கனவீனம்பண்ணலாமா?
இந்த விடயத்தை தான், நம் ஆண்டவரும் இந்த உவமையில் கூறுகிறார்.
அப்படி என்றால், ஏன் நம் ஆண்டவருக்கு பரிசேயர் மீது இவ்வளவு கோபம்?
ஏன் நம் ஆண்டவருக்கு பரிசேயர் மீது இவ்வளவு கோபம்?
வாசிப்போம்...
மாற்கு 7: 9-13
9 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் கடவுளின் கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது.
10 எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
11 நீங்களோ,ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி, உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி.
12 அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்யஒட்டாமல்.
13 நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்களும் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
சிலருக்கு தம் தாய் தந்தையருக்கு பணம் கொடுக்க பிடிக்கவில்லை.
ஆனால் நியாயப்பிரமாணம், தாய் தந்தையை மதித்து நட என்றும் தந்தையையும் தாயையும் சபிப்போர் கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது.
இதற்கு என்ன செய்ய என்று மக்கள் பரிசேரிடம் கேட்க அவர்கள், நான் கடவுளிடம் கொடுக்க பொருத்தனை செய்திருப்பதால் கொடுக்க முடியாது அல்லது கொடுக்க பணம் இல்லை என்று கூறுவதற்கு அவர்களை வழி நடத்தி இருக்கிறார்கள்.
அதாவது, கடவுளுக்கு பொருத்தனை செய்வதென்றால் தங்களிடம் தான் அந்த பணம் வரும் என்று அறிந்து நியாயப்பிரமாணத்தை பரிசேயர் சதுசெயர் துஷ்பிரயோகம் செய்தனர்.
அதாவது, வேறொரு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதால், தாய் தந்தைக்கு கொடுக்கும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற முடியாது என்று நியாயப்பிரமாணத்தில் உள்ள ஓட்டைகளை தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்தி உள்ளனர்.
இப்படியான காரியங்களை பரிசேயர் செய்து வந்ததால் தான் நம் ஆண்டவர் இந்த உவமையை கூறுகிறார்.
உவமையின் விளக்கம்
உவமையில்
செல்வர் = எஜமான் = கடவுளாம் பரமதந்தை
கணக்காளர் = உக்கிராணக்காரன் = பரிசேயர்
கணக்காளர் எஜமானரின் உடைமைகளை பாழாக்குதல் = பரிசேயர் கடவுளின் நியாயபிரமாணத்தை துஷ்பிரயோகம் செய்தல்
எஜமான், கணக்காளரை பொறுப்பில் இருந்து நீக்குதல் = யூத யுகத்தில், விசாரிப்பு காரர்களாக இருந்த பரிசேயரின் பொறுப்பு, சுவிசேஷ யுகத்தில் நீக்கப்பட்டது.
இப்போது உள்ள யூத மதத்தில், பரிசேயர், சதுசேயர் இல்லை.
உவமையில் மறைந்துள்ள தீர்க்கதரிசனம்
அன்றைய காலங்களில், கணக்காளர்களாக பண ஆசை மிக்க பரிசேயர் இருந்தனர்.
இந்த காலத்தில், விசுவாசிகளின் பணத்தை கொள்ளையிடும் கள்ள போதகர்கள் (டுபாக்கூர் பாஸ்டர்கள்) உள்ளனர்.
எவ்வாறு, நியாயப்பிரமாணத்தை துஷ் பிரயோகம் செய்து மக்களை பரிசேயர் வஞ்சித்தார்களோ, அதே போல, இன்றைய கள்ள போதகர்கள் இறை வார்த்தைகளை பயன்படுத்தி, தசமபாகம் காணிக்கை என்கிற பெயரில் மக்களை வஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள்.
எவ்வாறு, யூத யுகத்தில் இருந்த பண ஆசை உள்ள பரிசேயர் அவர்களது பொறுப்பில் இருந்து சுவிசேஷ காலத்தில் நீக்கப்பட்டு காணாமல் போனார்களோ,
அதேபோல, இப்பொழுதுள்ள சுவிசேஷ காலத்தில், மக்களை தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்தி வரும், பண ஆசை உள்ள டுபாக்கூர் மேய்ப்பர்கள், வரப்போகும் ஆயிரம் வருட ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
வாசிப்போம்...
எசேக்கியேல் 34 அதிகாரத்தை முழுதும் வாசிக்கவும்.
சில வசனங்கள் இங்கே...
எசேக்கியேல் 34: 9,10
9 எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்:
10 தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன். எனவே தாங்களே மேய்ந்துக் கொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.
ஆம். ஆயிரம் வருட அரசாட்சியில் நடக்க போவதை கூறும் இந்த இறைவாக்கு, கடவுள், தங்களையே மேய்த்து கொள்ளும் இன்றைய மேய்ப்பர்கள் மீது கொண்டிருக்கும் கோபத்தை வெளிப்படுத்துகிறது. வாசிப்போம்
ஏசாயா 56: 10,11
10 அவர்களின் சாமக்காவலர் அனைவரும் குருடர், அறிவற்றவர்: அவர்கள் அனைவரும் குரைக்க இயலா ஊமை நாய்கள்: படுத்துக்கிடந்து கனவு காண்கின்றவர்கள்: தூங்குவதையே விரும்புகின்றவர்கள்.
11 தீராப் பசிகொண்ட நாய்கள்: நிறைவு என்பதையே அறியாதவர்: பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்: அவர்கள் அனைவரும் அவரவர் தம் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்: ஒவ்வொருவரும் தம் சொந்த ஆதாயத்தைத் தேடுகின்றனர்.

எண்ணெய்யும் கோதுமையும்
உவமையில், வேலையை விட்டு நீக்கப்பட்ட கணக்காளர், எஜமானிடம் கடன்பட்டவர்களை அழைத்து, 100 குடம் எண்ணெய் வாங்கியவரிடம் 50 என்று எழுத சொல்கிறார்.
100 மூடை கோதுமை வாங்கியவரை 80 என்று எழுத சொல்கிறார்.
வேத வல்லுநர்களின் கூற்றுப்படி, அவர் குறைத்துக் கொண்ட தள்ளுபடி, அவருடைய பங்கு வட்டியாகும்.
அதாவது, கடன் பட்டவர்கள் - கடனாக வாங்கியது 50 குடம் எண்ணெயும் 80 மூடை கோதுமை மட்டுமே ஆகும். தள்ளுபடி செய்யப்பட்டது கணக்காளருக்குரிய வட்டி ஆகும்.
இங்கு, எண்ணெய் என்பது பரிசுத்த வல்லமை/ஆசிர்வாதத்தை குறிக்கும்.
கோதுமை என்பது அறுவடை கால சத்தியங்களை குறிக்கும்.
50 = 5 : நம் ஆண்டவரின் ஈடுபலியை குறிக்கும்.
80 = 8 : ஆயிரம் வருட அரசாட்சிக்கு பின் துவங்கும் எட்டாம் நாளை குறிக்கும்.
அதாவது ஆயிரம் வருட அரசாட்சியில், பரிசேயரும் இன்றைய மேய்ப்பர்களும் தாங்கள் சுயலாபத்திற்காக திரித்துக் கூறிய தவறான உபதேசங்களை நீக்கிவிட்டு, உண்மையான கிறித்துவின் சிலுவை மீட்பு ஈடுபலி பற்றிய இறை சத்தியங்களையும், அடுத்து வரும் எட்டாம் நாளாகிய கடவுளின் முடிவில்லா இறையாட்சியை பற்றிய சத்தியங்களை மட்டும் உயிர்த்தெழுந்த மக்களுக்கு அளிப்பார்கள் என்பதை புரிந்து கொள்கிறோம்.
இதனால்தான் உவமையில் - எஜமான், அநீதி உள்ள உக்கிரானக்காரன் புத்தியாய் செய்தான் என்று மெச்சி கொண்டான் என்று வாசிக்கிறோம்.
ஆம், ராஜ்யத்தில் அவர்களும் மன்னிக்கப்பட்டு, தங்கள் நல்ல பங்கை பெற்றுக் கொள்வார்கள்.
வாசிப்போம்...
மாற்கு 9:41, மத்தேயு 10:42
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
சீடர்களே...சிறுமந்தைகளே... இந்த உவமை, பரிசேயருக்கும் தசமபாக பாஸ்டர்களுக்கு மட்டும் எச்சரிக்கை கிடையாது.
இதை நம் ஆண்டவர், சீடர்களிடம் தான் கூறினார்.
அவரது சிறுமந்தையாக அழைக்கப்பட்ட நாமும் இரு எஜமான்களுக்கு வேலை செய்ய முடியாது.
வாசிப்போம்
லூக்கா 16: 9
அநீதியான செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.
நமக்கு நண்பர்கள் யார்?
ஆம். நம் கடவுளாம் பரம தந்தையும் நம் ஆண்டவரும் தான் நமக்கு உற்ற நண்பர்கள்.
ஆபிரகாம் அவர்கள் எவ்வாறு கடவுளின் நண்பர் என்று அழைக்கப்பட்டாரோ, அதே போல நாமும் கடவுளின் நண்பர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். 🙂
வாசிப்போம்
லூக்கா 16: 11, 12
11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?
12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?
பண விடயத்தில் மிகவும் நேர்மையை, நம்மிடம் கடவுள் எதிர்பார்க்கிறார்.
நீங்கள், யாரிடமாவது பணம் வாங்கி திருப்பி கொடுக்காமல் பல நாட்களாக இழுத்தடித்து கொண்டு இருந்தால், விரைந்து திருப்பி செலுத்தி கடவுளுக்கு ஏற்புடையவராகுங்கள்.
இந்த உவமையின் விளக்கம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், கண்டிப்பாக தொடர்பு கொள்ளவும். நன்றி. 🙂
நம் பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்


Comments